புதிய மனிதன்
(1)
மாலை நேரம் வயல்களில்
நெற்பயிரின் பச்சை நிறம் கண்ணுக்குப் பசுமையையும், அதன் அசைவில் உண்டாகும் காற்று சுகமாகவும்,
நெல் வயலில் தேங்கி நிற்கும் நீர் சூரியனின் மாலை வெய்யிலில் கண்ணாடியில் பிரதிபலிப்பது
போல் தகதக என்று பார்ப்பவர்கள் கண்களைக் கவர்ந்த அந்தப் பசுமையான இடத்தைச் சுற்றி நெடுஞ்சாலை
ஒன்று அமைந்து அதன் ஓரங்களில் தென்னை மரங்களும், புங்க மரங்களும் இரு பக்கமும் அமைந்து
வழி நெடுகிலும் நிழல்களையே தந்து நம்முடைய நிழல்களை எப்பொழுதும் மறைக்கும் விதம் அமைந்த
அந்தச் சாலை மாலை நேரத்தில் இரவு நேரம் ஆனது போலக் காட்சி அளித்து நின்ற சமயத்தில்
பேருந்து ஒன்று வந்து நின்றது.
அந்தப் பேருந்திலிருந்து
இரண்டு இளம் வாலிபர்கள் இறங்கினார்கள்.
ஒருவன் கையில்
சூட்கேசும் மற்றொவன் கையில் எலெக்ட்ரான் வாச்சும் சுமந்துக் கொண்டும், பெல்பாட்டமும்,
ஹுவும் போட்டுக் கொண்டு இருந்தான். மற்றொருவனும்
அவனைப் போலவே இருந்தான்.
அதே உயரம், நல்ல
வாட்ட சாட்டமான மார்பளவு, சூட்டும், பேண்டும், அதேபோல எலெக்ட்ரான் வாச்சும் கையில்
சூட்கேசும் சுமந்துக் கொண்டு யாரையோ தேடிக்கொண்டு இருந்தனர்.
சுற்றிச் சுற்றிப்
பார்ப்பதும், கையில் இருக்கும் வாச்சைப் பார்ப்பதும் மீண்டும் இவ்வாறே செய்துக் கொண்டு
இருந்தனர். அதேசமயம் அவர்கள் சுமந்து வந்த
வாகனம் டர்… டர்… என்ற பேரிரைச்சலுடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது.
இப்படியே அரை
மணி நேரம் வாட்சைப் பார்ப்பதும் வழியைப் பார்ப்பதுமாக இருந்து சோர்வடைந்த அவர்கள் முகத்தில்
சந்தோஷம் வந்ததே பார்க்கலாம்.
ஆமாம், அவர்கள்
பார்த்துக் கொண்டு இருந்த திசையில் ஒருவர் மெல்ல அடிமேல் அடி வைத்துக் கொண்டு வந்தார். அவரைப் பார்த்துத் தானோ என்னமோ? இவர்கள் சந்தோஷப் படுகிறார்கள்.
இவர்கள் இதுவரை
காத்துக் கிடந்தவர் வந்தாரோ? இல்லை இவர்கள் அவரிடம் ஏதாவது உதவி கேட்பார்களோ? யார்
பார்த்தார்கள்.
தன்னந்தனியே இருந்த
அந்த இரண்டு வாலிபர்களின் முகத்தில் சோகத்தைக் கண்ட நாம் இப்பொழுது மகிழ்ச்சியைக் காண்கிறோம்.
ஒருவன் பாலைவனத்தில்
தன்னந்தனியே சுற்றி அலைகிறான். அதனால் அவனுடைய நாக்கு வறண்டு தண்ணியைத் தேடுகிறான். தேடி அலைகிறான். தண்ணீர் கிடைத்ததும் அவன் அடையும் மகிழ்ச்சிக்கு
எல்லை உண்டா? அதுபோல அவன் பேச்சுக்குத் துணையே
இல்லாது வெறும் மணல் பரப்பையும், உலர்ந்த ஆங்காங்குக் காணப்படும் சிறு செடிகளும், விஷப்
பூச்சிகளும், விஷப் பாம்புகளும், சுழற்காற்றையுமே சந்தித்த ஒருவனுக்கு ஓர் பேசும் துணை
கிடைத்தால் அவன் அடையும் மகிழ்ச்சிக்கு முடிவு ஏது? அதுபோல இருக்குமோ இவர்களின் சந்தோஷம். இதோ… அவரும் இவர்களை நெருங்கி வந்துவிட்டார்.
தளர்ந்த நடையும்,
உடலில் ஆங்காங்குச் சிவந்து காணப்பட்டதால் அவர்கள் எப்பொழுதோ நெருப்பின் மையத்தில்
சிக்கியவர் என்று தோன்றுகிறது. இல்லை அது வெண்பிறை
நோயோ? யார் கண்டார்கள். நரைத்த முடியும், ஒழுங்கற்ற ஆடையையும் அணிந்து தன்
மங்கிய பார்வையை அந்த வாலிபர்கள் மீது நோக்கியது.
அவர் அவர்களை
நீங்கள் எந்த ஊர். ஏதாவது வேண்டுமா? என்று
கேட்பது போல அவர் புருவங்களைத் தூக்கிக் காண்பித்தார்.
ஐயா…
எ…ன்ன… த… ம்பி…
எங்களுக்கு ஒரு
உதவி செய்வீங்களா?...
நா… ன்… என்…னப்பா…
உதவி செய்ய முடியும்… நீங்க ஊருக்குப் புதுசா…
ஆமாங்க… என்றான்
ஒருவன்.
இங்கே யார் வீட்டுக்கு
வந்திருக்கீங்க… என்றார் பெரியவர்.
ஐயா… எங்களுக்கு
இந்த ஊரில் யாரையும் தெரியாது. நாங்க பட்டணத்திலிருந்து
வர்ரோம்.
பட்டணமா… என்று
பெரியவர் அவர்களை மங்கிய பார்வையானாலும் உற்று நோக்கி தன்னுடைய தொலதொல வாயைத் திறந்தவர்
திறந்தவாரே…
ஐயா… ஐயா… என்று
அவரை உலுக்கிய பிறகே தன்நிலை பெற்றவரின் கண்களில் பொல பொல என்று கண்ணீர் வடிந்தது.
ஐயா… பட்டணம்
என்றால் நீங்க ஏன் அழறீங்க…
அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா…
நீங்க ஏன் இங்க வந்தீங்க…
இந்த ஊரில் பழைய
கோயில்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். நாங்கள்
கல்வெட்டுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வந்துள்ளோம். இன்று பொழுது போய்விட்டது. இப்ப இந்த இராத்திரிக்குத் தங்க இடம் தந்தால் ரொம்ப
நல்லா இருக்கும். நாளைக்கு நாங்க வீடு வேற எடுத்துக்கறோம் என்றான் ஒருவன்.
அதுசரி… தம்பி
உங்களை நான் எப்படி நம்புவது?
ஐயா… நாங்க கல்லூரி
மாணவர்கள். இதோ எங்களுடைய அடையாள அட்டை…
ஓகே… நான் உங்களுக்குத்
தங்க இடம் தருகிறேன். பட் ஒன் கண்டிஷன். நீங்க தவறு ஏதும் செய்யக்கூடாது.
வந்த அந்த இரண்டு
வாலிபர்களும் வாயைப் பிளந்துக் கொண்டு பேந்த பேந்த விழித்தனர்.
தம்பிகளா… என்ன
அப்படி மிறலுறீங்க…
பெரியவரே… நீங்க
தானே இப்ப ஆங்கிலத்தில் பேசியது.
ஆமாம்… நான் அந்தக்
காலத்தில் பி.ஏ. படிச்சவன்.
படிச்சிட்டுமா…
இந்த நிலையில்…
தம்பி… என் கதையே
வேற அதெல்லாம் உங்களுக்கு எதற்கு. வாங்க இன்று
என் வீட்டிலேயே தங்கிக் கொண்டு நாளைக்கு உங்க இஷ்டப்படி செய்யுங்க என்றார் அந்தப் பெரியவர்.
தம்பி உங்க பெயர்
என்ன?
ஐயா… என் பெயர்
ரமணி… இவன் என் ஆருயிர் நண்பன் பாலு.
தம்பி நண்பர்களாக
இருக்க வேண்டியது தான். அதுவே தீமையாய் முடிவு
வரக்கூடாது. நானும் ஒருத்தனை ரொம்ப நம்பி மோசம் போனவன் தான். நானும் ஒரு முன்னாள் கோடீஸ்வரன் தான். சொந்த மாமன் என்பதால் அவனையே என் வீட்டில் அதிகமான
அதிகாரம் தந்து குடும்பப் பொறுப்பை அவனிடமே தந்தேன். கடைசியில் என்னை இந்த நிலைக்கு மோசம் பண்ணிட்டான். அப்ப வந்தவன் தான் நான் இந்த ஊருக்கு. என் மனைவிக்கு இந்த ஊர் பிடித்துவிட்டதால் நாங்கள்
இங்கேயே தங்கிவிட்டோம். அதுபோல,
ஐயா… பெரியவரே…
எங்கள நம்புங்கள். நாங்கள் அப்படியல்ல. நாங்கள்
வள்ளுவப் பெருமானின் வழி வந்தவர்கள். நான்
ஏதாவது தவறு செய்தால் இவன் என்னைக் கண்டித்துத் தேற்றுவான். அதேபோல் தான் எனக்கும் என்று தங்கள் நட்பு வெளிநட்பு மட்டும் அல்ல உள்ளத்தில்
இரத்தத்தில் அணு அணுவிலும் எங்கள் நட்பைப் பற்றிக் கேட்டால் அது எங்களைப் பற்றி ஒரு
கதையைச் சொல்லும் என்றான் ரமணி.
தம்பி… இது நீடித்தால்
எனக்கு ரொம்ப சந்தோஷம் தம்பிகளா… இதோ இருக்குதுபார் காளி கோயில் இதிலே நெறைய கல்வெட்டுக்கள்
இருக்கின்றன. அதோ தெரியுது பார் அதுதான் ஊர்.
ரமணியும், பாலுவும்
அந்த ஊரின் இயற்கைக் காட்சியையும் ஊரின் அமைப்பையும் அணு அணுவாக இரசித்து இன்பமுற்று
வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தனர்.
பட்டணத்தில் ஜனங்களின் நெரிசலையும், வாகன நெரிசலையும், அதன்
சத்தங்களையும் அது வெளிடும் கரிமில வாயுவையும் பரந்த பெரிய பெரிய மாளிகைகளையும் கண்டவர்
கண்களுக்கு இயற்கை அன்னையே குடிகொண்டு நிற்கும் இந்தக் கிராமத்தில் சுந்தமான காற்றைச்
சுவாசித்து, அமைதியை அனுபவித்து வரும் இவர்கள் எந்நிலையில் இருப்பார்கள் என்று சொல்லத்
தேவை இல்லை. அதே போலத்தான்.
அந்தக் கிராம
மக்களும், குழந்தைகளும் பெல்பாட்டையும், சூவையும் போட்டு வரும் இவர்கள் ஒரு வேடிக்கைப்
பொருளாக எண்ணிக் கொண்டு அவர்களை நோக்கினர்.
குழந்தைகள் அவர்கள் பின்னால் ஓ… வென்ற இரச்சலுடன் வந்துக் கொண்டு இருந்தனர்.
அந்த ஊரில் தங்கப்ப
பெரியவர் என்றால் எல்லோருக்கும் ஒரு மரியாதை…
அப்படி ஒரு செல்வாக்கு அந்த ஊரில் அவருக்கு. இத்தனைக்கும் அவர் செல்வந்தரும் இல்லை. தினம் உழைத்தால் தான் வயிற்றுப் பிழைப்பு.
ஒருவருடன் அன்பு
கொள்ள அவரிடம் பணம் தேவையில்லை. சொத்தும் தேவையில்லை. தூய்மையான உள்ளம் உள்ளவர்கள் இருந்தாலே போதும். அந்த நிலையிலே தான் தங்கப்ப பெரியவரும் இருந்தார். அந்த ஊரே அவர் மேல் ஒரு பற்று வைத்து இருந்தது. அவர் இந்த ஊர் வந்ததில் இருந்து அந்த ஊர் மக்களிடம்
பழகி அன்பெனும் கரைகாணாத பெருஞ் செல்வத்தை இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்தார்.
வாலிபர்கள் இரண்டு
பேரும் பெரியவர் பின்னால் செல்வதைக் கண்டு ஊர் மக்கள் மரியாதையுடன் எழுந்து அவரவர்
பிள்ளைகளை அழைத்துக் கொண்டனர். பெரியவர் வீடும்
வந்தது.
வழிநெடுகிலும்
அமைந்த மரங்களும், மாலை வேளையில் வயலின் தென்றல் காற்றும், பசுமையான சுற்றுப் புறத்தையும்
வேடிக்கை பார்த்துக் கொண்டு ஊர் வந்தவர்கள்…
இதுவரை காம்பௌண்டு
சுவர்களும், அதற்குள்ளே பல சிறு செடி, கொடிகளையும் மூளையில் மாளிகையிலே இருந்து, கண்டு
வந்த அவர்கள், தொடர்ச்சியான வீடுகளும், மஞ்சுவீடு, ஓட்டு வீட்டு, ஒட்டு வீடு என்று
இப்படிப் பல விதமாக தொடர்ச்சியாகவும், வீட்டின் முன்புறம் அமர்ந்து பேசக் கூடிய அளவுக்குச்
சின்ன திண்ணைகளும், தெருச் சுவர் ஓரமாக ஒரு ஜன்னலும் கொண்டு அமைந்த வீடுகளையும் வீதியோரங்களில்
எல்லாம் தென்னை மரங்களும் வேப்பம் மற்றும்
புங்க மரங்களும், தெருவின் ஓரத்தில் குடிநீர்க் கிணறும், அதில் இளம் நங்கைகள் தண்ணீர்
எடுப்பதும், வீடுகளின் திண்ணையில் அமர்ந்தவர்கள் எல்லாம் எழுந்து மரியாதை செய்வதையும்
கண்டு வந்த அவர்கள் பெரியவரின் பேச்சைக் கேட்டு…
தம்பி… இது தான்
நம்ம வீடு…
இதுவரை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டு வந்தவர்கள் தன்நிலை பெற்று தயாரானார்கள்.
சின்ன சுற்று
வீடு. திண்ணையே இல்லாத, மஞ்சால் வேயப்பட்ட
அந்த வீட்டினுள் நுழைந்தார்கள்.
மரகதம்… மரகதம்
என்று பெயரியவர் அழைத்தார்.
என்னப்பா… இதோ
வந்துட்டேன் என்று சொல்லிக் கொண்டே வந்தவள்… இரண்டு இளம் வாலிபர்களைக் கண்டதும் அப்படியே
நின்றுவிட்டாள்…
அந்தத் தேன்மொழியால்,
ஆற்றோடை போன்ற நெற்றியாள், அலைபோன்ற கூந்தல் படைத்தவள், மெல்லிய இடையாள், மீன் போன்ற
விழியாள், வண்ண மகளாய் ஒருவள் நிற்பதைக் கண்டு வாலிபர்களும் தம் விழிகளை அகலப் பரப்பினர்.
அம்மா… மரகதம்…
இவர்கள் பட்டணமாம்… நம் ஊர்க் காளி கோயில் இல்லே… அதிலே இருக்கிற கல்வெட்டுக்களைப்
பரீட்சை செய்ய வந்திருக்கிறார்கள். இன்றைக்கு
இவங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டிலேயே தங்கட்டும். நாளைக்கு… என்று உள்ளிழுத்தவர் மரகதம்
ஓடிவிட்டதைக் கண்டு நிறுத்திக் கொண்டார்.
தம்பிகளா… இவள்
என் ஒரே மகள் மரகதம். என் மனைவி இறந்து இரண்டு
வருடம் ஆகிறது. இதோ இருங்களென்று புறக்கடை
பக்கமாகத் தன் மகளைத் தொடர்ந்தார்.
என்னம்மா… வந்தவர்கள்
கிட்டே…
அப்பா… அவங்களுக்குச்
சாப்பாடு என்ன செய்யறது… வீட்டில் ஒண்ணுமே இல்லியே…
இப்ப என்னம்மா
இருக்கு…
கேழ்வரகு கஞ்சி
தான் செய்திருக்கேன்.
அரிசி இல்லையா?
நேத்தே பட்டபாடு
தெரியாதா?
சரிம்மா… நான்
யார் கிட்டவாவது போய் வர்ரேன். அவங்க குளிக்க
தண்ணீர் எடுத்து வை.
சரிப்பா…
தம்பி… பின்னாலே
போய் குளிங்க… இதே வந்துடறேன்…
ஐயா… உங்களுக்குச்
சிரமம் நாங்க வைக்கிறதா தெரியுது…
அதெல்லாம் ஒண்ணுமில்லே
தம்பி…
ஐயா… நீங்க பேசியது
எனங்களுக்குத் தெரியும்… அதனாலே… என்றான் ரமணி.
என்ன தம்பி சொல்றீங்க…
ஆமாம்… நாங்க
கேழ்வரகுக் கஞ்சியே குடிக்கிறோம்.
தம்பி… என்று
பெரியவர் வாயைப் பிளந்தார்.
எங்களுக்குத்
தங்க இடமும் கொடுத்து அதுக்கு மேலே நீங்க கஷ்டப்பட நான் விரும்பலே என்றான் ரமணி.
ஆமாம் ஐயா… நாளைக்குக்
கதையைப் பின்னாலே பார்க்கலாம். இன்றைக்கு நீங்க
கஷ்டப்பட தேவை இல்லை என்றார் பாலு.
சரி தம்பி உங்கள்
விருப்பப்படியே செய்யுங்க… கிணற்றடியிலே தண்ணீர்
இரச்சி இருக்கு போய் குளிச்சிட்டு வாங்க..
வயிற்றுக்கு வசதி
இல்லை என்றாலும் கிடைத்ததை பங்கிட்டு உண்பதே நல்லவர்க்கு அடையாளம். வசதி படைத்தவர்கள் பணத்திற்கும் பொருளுக்கும் ஆசைப்படுவார்கள். ஆனால் ஏழைகள் மனதில் காக்கை உள்ளம் அல்லவா? நிறைந்து
இருக்கிறது.
குளித்து விட்டு
சாப்பிட்ட பிறகு எல்லோரும் படுக்கப் போனார்கள்.
ரமணிக்கும், பாலுவுக்கும்
பாய் தலையணை கொடுத்து அந்த வீட்டின் மூலையில் படுக்க வைத்தார். அவர்கள் பக்கத்தில் பெரியவரும், பெரியவர் பக்கத்தில்
மரகதமும் படுத்துக் கொண்டாள். இதற்கே அவள்
அடுப்பு உள்ள இடத்தில் தள்ளப்பட்டாள். அவ்வளவு
சிறிய வீடு மண்ணெண்ணெய் விளக்கு அணைக்கப்பட்டது.
கொஞ்சம் வெளிச்சத்தில்
இருந்த அந்த வீடு எதிரில் இருப்பவர்கள் யார் என்றே தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு
இருள் சூழ்ந்துக் கொண்டது.
சிறிது நேரம்
கழித்தது. இருளில் ஒளிக்கு பயந்து கிடக்கும்
விஷப் பூச்சிகள் வெளிவரும். அதுபோல இருள் அடைந்த
வீட்டிற்குள் தன் சொந்தம் என்று வந்து விட்ட தேள் ஒன்று மரகதத்தின் மார்பகத்தில் ஏறிக்
கடித்தது.
வீல்… என்ற பெரு
இரைச்சல் அந்த நிம்மதியைக் கெடுத்தது.
அப்பா… தேள்…
கடித்திட்டதுப்பா… ஐயோ… அப்பா… என்று தன் கரத்தை அப்பாவின் மேலே போடுவதை ரமணியின் முகத்தின்
மேல் போட்டாள்.
மரகதத்தின் கை
அவன் மேல் பட்டதும் மெய்சிலித்து தன்னோட சூட்கேசைத் தேடித் திறந்து…
ஐயோ… அப்பா… வலி
தாங்க முடியலியே…
டார்ச்சின் ஒளி…
அந்த வீட்டை இருளில் இருந்து மீட்டது.
அவள் போட்ட சத்தத்தில்
எழுந்துக்கொண்ட எல்லோரும் போகுமிடம் தெரியாது இருந்தவர்கள். ஒளி கிடைத்ததும் தேள் இருக்கும் இடத்தைப் பெரியவர் கண்டு அதை அடித்துவிட்டு விளக்கை ஏற்றினார்.
ஐயோ… அப்பா… ஒடம்பெல்லாம்
வலி…
என்னங்க… எங்க…
தேள் கொட்டியது… என்றான் ரமணி.
அப்பா… வலி என்று
தன்னோட மார்பகத்தைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.
பெரியவரே தப்பா
நினைக்காதீங்க… ஜாக்கெட்டை கொஞ்சம் லூஸ் பண்ணச் சொல்லுங்க… இதோ வந்துடறேன் என்று வெளியே
வந்தவன், ஏதோ கை நிறைய ஒரு மூலிகைச் செடியின் இலைகளைக் கிள்ளி எடுத்துக் கொண்டு டம்ளரில்
அந்தப் பச்சிலையின் சாரத்தைப் பிழிந்து எடுத்து… இதைக் குடிங்க என்றான் ரமணி.
வலியில் என்னது
என்றும் பாராமல் லொடக் கென்று குடித்துக் கசப்பில்
மூஞ்சியைச் சுழித்தாள்.
கொட்டின இடம்
சரியாகச் சொல்லுங்க… என்று ரமணி பச்சிலையைக் கசக்கிக் கொண்டே கேட்டான்.
அங்கே இருப்பவர்கள்
எல்லோரும் ஆண்களே… கடித்ததோ மார்பகம்… இதை எப்படி அவர்களிடம் காண்பிப்பாள். வலிக்குத் தாங்காமல் துணிச்சலாக கழுத்துக்குக் கீழே
மார்புக்கு மேலே கொட்டிய இடத்தைக் காண்பித்தாள்…
அந்த இடத்தில்
அந்தப் பச்சிலையைத் தேய்த்தவன், அவள் முகத்தைப் பார்த்தான். அப்போது அவள்…
தன் உடம்பின்
மீது ஓர் ஆடவன், அதுவும் இளம் வாலிபன் ஒருவன் வைக்கக் கூடாத இடத்தில் கையை வைத்து இதமாகப்
பங்குனி மாதத்தில் வெயிலுக்கு அலைந்து வெப்பம் உண்டாக்கிக் கொள்கிறோம். அதுபோல, தன் உடம்பின் மீது அவன் கை பட்டதும் மெய்சிலிர்த்துப்
பெண்மையை அவனிடம் பரிகொடுத்தவள் போல பேந்த பேந்த தன் இருகண்களையும் காட்டி, முகத்தில்
ஆனந்தக் குறி தெரிய அவனை உற்று நோக்கினாள் அந்த இளம் நங்கை மரகதம்.
இதைக் கண்ட ரமணி
சட்டென்று கையை எடுத்து இந்த இலையை வைத்து நீங்களே கட்டிக் கொள்ளுங்கள் என்று அவன்
படுக்கச் சென்றான்.
பொழுது புலர்ந்ததும்
தேவையான பொருள்கள் எல்லாம் வாங்கி வந்து கொடுத்தனர்.
என்ன தம்பி இதெல்லாம்…
பெரியவரே… நீங்க
எங்களுக்குச் செய்த உதவிக்கு இதுகூட செய்யக் கூடாதா என்று மடக்கினான் ரமணி.
என் மார்பகத்தை
தொட்டு விட்ட நீங்க எனக்கு என்ன உதவி செய்யப் போறீங்க என்று தன் மனதுக்குள் சிரித்துக்
கொண்டாள் மரகதம். அப்போது ரமணி ஒரு காகிதமும்,
பேனாவும் எடுத்துக் கொண்டு எழுதினான்…
என்ன தம்பி எழுதறீங்க…
ஒண்ணுமில்லீங்க…
வெளியே போய் வந்தோம் இல்லே. இவனுக்குக் கவிதை
ஏதாவது பிறந்திருக்கும் எழுத உட்கார்ந்து விட்டான் என்றான் பாலு.
தம்பி கவிதை கூட
எழுதுவியா?
ஓ… இவரு கவிஞர்
கூடவா…பிடிச்சாலும் புளியங் கொம்பா பிடி என்பார்கள். இவரு என்னைக் காதலிக்கிறாரா? இராத்திரி என் மார்பகத்தைத்
தொட்ட போது என்ன சுகம். அவரையே நான் பார்த்ததைக்
கண்டு ஏன் விலகி விட்டார். இவர் என்னைக் காதலிப்பாரா?
என்று அடுப்படியில் உப்புமா செய்துக் கொண்டு இருந்த மரகதத்தின் பிஞ்சு உள்ளம் இப்படி
அலைய…
தம்பி நான் அதைப்
பார்க்கலாமா?... என்று பெரியவர் கேட்டார்.
இதெல்லாம் ஒண்ணுமில்லிங்க…
ஏதோ… எனக்கொரு பைத்தியம் இந்தாங்க… என்று ரமணி அந்தக் கவிதையை அவரிடம் கொடுத்தான். அதிலே,
விடிகின்ற காலையில் இமயம் சென்றேன்
விழிக்கின்ற இடமெல்லாம் பனித்துளிகள்
கடந்தஇடம் காணா
திகைத்து நின்றேன்
கழியுமிடம் தெரியுது அம்மட்டோ?
அடியேனைச் சுற்றிலும்
அருமை நண்பர்
அடியேனை அன்பால் அரவணைத்தனர்
பிடிவருமுன் னேமணி
யோசை வருது
பணியாள்போ குபின்னே துகள்வருது
நானமைதியாய் அமர்ந்தேன்
உன்னைச் சின்னாள்
நான்விட்டதில் லைஎன்றன வான்பூச்சிகள்
வான்பூச்சியின்
சத்தம் கேட்டு நாட்டில்
வான்மகளாய் தோன்றி னாபானு
பூசையறையில் பருத்தஉ
ருவொன்று வந்தால்
பூசாரிதான் என்ன செய்வானாம்
பூக்குவேளையில்
கதிரவன் வந்தால் யானோ
புத்தாளன் என்ன செய்வேனாம்.
பேஷ்… பேஷ்… தம்பி
நல்லா இருக்கு.
ஐயா… இவனுக்குப்
புகழுரைகள் தேவை இல்லை என்றான் பாலு.
ஐயா… உங்களுடைய
ஆசிர்வாதம் இருக்கும் போது…
அப்பா சமையல்
ஆகிவிட்டது… வாங்க…
சாப்பாடு போடும்
போது மரகதம் ரமணியை உற்றுப் பார்த்துக் கொண்டு, அவன் இலையில் நிறைய போட்டாள். போட்டுக் கொண்டே இருந்தாள்.
அவனே… போதும் போதும் என்றதும் நிறுத்திக் கொண்டாள்.
சாப்பிட்டுக்
கொண்டு இருந்தவனுக்கு அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கேட்டான். ஓடி வந்து அவன் வாயில் வைத்து தலையைத் தட்டிக் கொடுத்தாள்
மரகதம். தற்செயலாக மேலே பார்த்தவன்… அவள் தன்னையே
பார்ப்பதைக் கண்டு ஒரு புன்முறுவல் அவ்வளவு தான் அதற்கு அவள் கொண்ட நாணம்…
இன்னும் கொஞ்சம்
வெச்சிக்கறீங்களா… என்று ரமணியைக் கேட்டாள்…
ஏம்மா… தங்கச்சி
நான் ஒருத்தன் இங்க இருப்பதே உன் கண்ணுக்குத் தெரியலியா… என்றான் பாலு…
அப்படி இல்லீங்க…
இந்தாங்க…
போதும்மா… என்றான்
பாலு.
சாப்பிட்டுவிட்டு
ரமணியும், பாலுவும் காளி கோயிலுக்குச் சென்றார்கள்.
(2)
நடுப்பகல் நேரம். சூரியனின் வெப்பம் சற்று குறைவு தான். இருந்தாலும் காற்றின் வேகத்தில் வெப்பமே தெரியாது
குளிர் போக்கும் மிதவெப்பத்தை அந்த நேரத்தில் கதிரோன் தந்துக் கொண்டு இருந்தான்.
ரமணியும் பாலுவும்
காளி கோயிலில் இருக்கும் கல்வெட்டுக்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது ரமணி…
டேய்… பாலு…
என்னடா…
மரகதத்தை எப்படிடா
தங்கச்சி என்று வெகு நாள் பழகினவள் போல அழைத்தாய்…
டேய்… அதைச் சொல்லுகிறாயா?
ஆமாண்டா…
India is my
Country. All Indian are my brothers and
sisters என்று தினந்தோறும் சொல்லுகிறோமே…
டேய்… என்னாலே
அவளை அதுபோல் நினைக்க முடியலேயேடா… என்றான் ரமணி
பின்ன எப்படி
நினைக்கிறீயோ…
என்னமோ… தெரியலே…
அவளைப் பார்த்ததில் இருந்து ஒரு இது…
டேய்… டேய்… நாம்
வந்தது ஒண்ணு… நீ ஒண்ணு செய்து வம்பிலே மாட்டிக்காதே…
இல்லைடா… அவளும்
என்னைக் காதலிக்கிறாள் என்று தான் நினைக்கிறேன்…
எப்படிடா அவ்வளவு
சுலபமா சொல்லிடுறே…
ஒரு பெண்… அதுவும்
குடும்பப் பாங்கான ஒருவள் தன் உடலை தன் தாய் கிட்டே காட்டுவா, அடுத்து கணவனிடம் தான்
காட்டுவா…
ஆமாம்டா… அதற்கும்
இதற்கும் என்னடா சம்மந்தம்…
சம்மந்தம் இருக்கு. நேற்று இரவு அவளைத் தேள் கொட்டிய இடம் உனக்குத்
தெரியுமா?
அதுதான் தெரிந்த
கதையாச்சே…
அப்ப என்ன நடந்தது
என்று தெரியுமா?
அதுதான் தெரியாதது
ஆச்சே…
அதைதான் சொல்லுறேன்…
நான் கை வைத்து தேய்த்துக் கொண்டு இருந்தேனா… அப்போது
என்னடா?... புதிர்
போடுறே…
அவள் என்னையே
விழுங்கிவிடுகிறவள் போலப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இது மட்டுமா…
காலையில் சாப்பிடும் போது பார்த்தியா?... எனக்கு எவ்வளவு உபசரிப்பு. அப்பவும் நான் தற்செயலாக அவளைப் பார்த்தேன். என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
சரிப்பா… இப்ப
என்னை என்ன செய்யச் சொல்லுறே…
நான் ஒண்ணும்
செய்யச் சொல்லலே… அவள் என்னைக் காதலிக்கிறாளா?
இல்லையா என்று மட்டும் உன் தங்கையிடம் கேட்டுச் சொல்கிறாயாடா? அவள் அருமை அண்ணனே… என் மைத்துனா?
டேய்… டேய்… என்ன உறவு முறையெல்லாம் அதிகமாக நீலுது… நாம்
வந்த வேலையை முடித்துக்கிட்டு போகணும்… இந்த மாதிரி தவறுகள் ஏதாவது செய்தாய் என்றால்…
பாலு… பாலு… ப்ளீஸ்டா…
ஏண்டா நான் என்ன
நாரதன் என்றா நினைத்துக் கொண்டாய். இல்லே ப்ரோக்கரா…
நீ என்ன வேண்டுமானாலும்
இரு. என்னால் அவளை இனி மறக்க முடியாதுடா…
ஏண்டா… கச்சிச்
செல்வனே புலவரின் வீட்டில் இடிபோடப் போகிறாய்…
மெய்தாண்டா அந்த
வீட்டை இடித்து மாளிகை ஆக்கலாம் என்று ஒரு யோசனை…
என்னடா சொல்லுகிறாய்…
ஆமாண்டா… நான்
அவளைத்தான் திருமணம் செய்துக்கப் போகிறேன்…
இதற்கு உங்கப்பா
சம்மதிக்கனுமே…
அவர் சம்மதம்
கிடக்கு… என் விருப்பம் அவர் விருப்பம்.
டேய்… இது வம்பிலே மாட்டிக்காமல் இருந்தால் சரி. எதற்கும் ஜாக்கிரதையாக நடந்துக்க… ரமணி இந்தக் கல்வெட்டுப்
பார்த்தாயா? இதிலே புதிய கருத்துக்கள் பல இருக்குதுடா…
அண்ணா… சாப்பாடு
ஆய்ப்போச்சு… என்று சொல்லிக் கொண்டே மறைவில் இருந்தவள் வெளியே வந்தாள்…
என்ன… சாப்பாடு
அய்ப்போச்சா… பாலு நம்ம வயிறு காலிடா… என்றான் ரமணி.
இல்லைங்க… சமையல்
செய்தாச்சி என்றேன்…
அப்போது மூவரும்
ஒன்றாகச் சேர்ந்து சிரித்தனர்.
ரமணி வாடா சாப்பிடப் போகலாம்.
எங்களுக்கு நீங்க
சமைத்துப்போட கஷ்டமா இல்லே…
அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க…
நான் என்னையே சமைத்துப் போடுறேன்… என்றாள் மரகதம்.
பாலு செத்தோம்டா… எண்ணெய்யே சமைத்துப் போட்டா யார் சாப்பிடுறது.
அப்போதும் சிரிப்பொலி.
ஏங்க… வீடு வந்து
சேர்ந்தனர்.
தம்பி போன இடத்தில்
செய்திகள் கிடைத்ததா? என்றார் பெரியவர்.
புதிய தகவல்கள்
எல்லாம் இருக்குதுங்க… ஆனால் எங்களால் புரிந்துக்கொள்ள முடியாத சொற்கள் எல்லாம் இருக்குது..
அதனாலே…
அதனாலே என்னப்பா
செய்யப் போறீங்க…
பாலுவை ஊருக்கு
அனுப்பி எங்கள் ஆசானை அழைத்து வரச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நீங்க வீடு எங்கேயும் பார்க்கலீங்களா?... என்றான் ரமணி.
வீடு எதற்குத்
தம்பி. இங்கேயே எங்களோட ஒரு மூலையில் இருந்திட்டாப்
போகுது… இதற்கு மரகதமும் ஒத்துக்கனா….
இருந்தாலும்…
என்று பேச்சை ஆரம்பித்த ரமணி ஏனோ நிறுத்திக் கொண்டான்.
சரிங்க… இருந்தாலும்
எங்களுக்கு நீங்க செய்யற உதவிக்கு என்ன கைமாத்து செய்யப் போறோம் என்றான் ரமணி.
அதெல்லாம் எதற்குத்
தம்பி மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து வாழ்வது தானே
நல்லது. நான் அப்படிப் போய் வருகிறேன்..
அடேடே… முனிசீபா… வாங்க… எங்க இவ்வளவு தூரம்…
சொம்மா தான் வந்தேன்.
உட்காருங்க…
ஆமாம்… யாரோ கோயில்
கல்வெட்டுக்களைப் பார்த்துக் கொண்டு இருந்தாங்க…
அவங்க உங்க வீட்டில்தான் தங்கி இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
ஆமாங்க… பட்டணமா?
உதவி வேண்டும் என்றாங்க… அதனாலே தான்…
பெரியவரே… நான்
சொல்லுறேன் என்று தப்பா நினைக்காதீங்க…
சொல்லுங்க…
வயசுக்கு வந்த
பெண் வீட்டிலே இருக்கு. இவனுங்களோ… வயசுப்
பசங்க. தப்புத்தண்டா ஏதாகிலும் நடந்துடப்
போகுதுங்க…
அதெல்லாம் எனக்கும்
தெரியும் முனுசீப்.
ஊரிலே நல்லவராக
இருக்கும் நீங்க உங்க பேரு கெடக்கூடாது பாருங்க…
எல்லாம் எனக்கும்
தெரியும். பசங்க நல்லவங்க போலத்தான் தெரியுது…
எப்படி அவ்வளவு
உறுதியாச் சொல்லுகிறீங்க என்றார் முனுசீப்.
ஒருவன் எப்படிப்பட்டவன்
என்பதை அவனுடைய நடத்தையிலேயே கண்டு பிடிச்சுடலாம்.
அப்படி என்ன செய்துட்டான்கள்
அந்தப் பசங்க…
ராத்திரியே…
அவங்க இந்தச்
சின்ன அறையிலா படுத்துக்கிட்டாங்க…
ஆமாங்க… மரகதத்தைத்
தேள் கொட்டிடுச்சு. இந்தப் புள்ளை என்ன செய்தது
தெரியுமா?
சொல்லுங்க…
தேள் மார்பகத்திற்கு
மேலே கடிச்சுதா… ஜாக்கெட்டை கழட்டச் சொன்னாங்க…
பார்த்தீங்களா? முதல்லேயே கடகால் போடுறாங்க…
நானும் முதல்லே
பயந்துதான் போய்விட்டேன். வெளியே வந்து ஏதோ
மூலிகை இலையை கிள்ளிக் கொண்டு வந்து சாரத்தை வாயிலே ஊத்தி, அந்த இலையைக் கசக்கி கொட்டிய
இடத்திலே தேச்சிது அந்தப் புள்ள…
அடிப்பாவிகளா?
சொல்லுறேன் கேளுங்க…
இதுக்கு எல்லாம்
மரமண்டையா இருந்துதா மரகதம்…
அது என்னங்க செய்யும்
வலியால துடிக்குது.
தேய்ச்சுக் கொண்டு
இருந்தவன் அவளைப் பார்த்தான். அவள் இவனையே
பார்த்துக்கொண்டு இருந்தாளா… பையன் அதை அவள் கையிலேயே கொடுத்துவிட்டு நீங்களே கட்டிக்குங்க
என்று சொல்லிட்டு படுத்துக்கப் போய்டுச்சு…
அடப்பாவிப் பசங்களா? இப்படியா செய்தாங்க.
காலையிலே தான்
தெரிஞ்சது.
என்னய்யா ஆச்சு…
ஒண்ணுமில்லே…
அந்தப் பையன் பாலு அதான் அவன் கூடவே இருக்கிறானே
அவன் சொன்னான்…
இந்தப் பயல் ஒரு
டாக்டராம்…
அடப்பாவமே… அப்படி
இருந்துமா இப்படி அலையறான்…
இன்னும் பாருங்க
கதை, கவிதை எல்லாம் எழுதுவாராம். இவர் கதை
எல்லாம் நம்ம ராணி பத்திரிகையிலே தமிழ் வெற்றி என்றவர் பெயரில் கதை வருவது எல்லாம்
இவருடைய கதை தானாம்.
அடடா… இவனா இதை
எல்லாம் எழுதுவது…
இன்னொரு விஷயம்…
இவரு எழுதர கதைக்குப் பணமே வாங்குவது இல்லையாம்… புகழ் வேண்டாம் என்கிறானாம்…
அடப்பாவி மனுசா…
யாராவது புகழும், பணமும் வேண்டாம் என்பார்களா? பணம் என்றால் பிணமும் வாய் திறக்கிற
இந்த நாட்டிலே இப்படி ஒரு மனிதனா? என்றார்
முனுசீப்.
அவர் கைபட்டால்
எந்த நோயும் சீக்கிரம் குணமாய்விடுமாம்… அவங்க அப்பா நிறைய சொத்துக்காரனாம்…
அப்படியா? அதான் பணத்தோட
அருமை தெரியலே…
இன்னொரு விஷயங்க…
பணக்காரங்க கேழ்வரகு கூழே சாப்பிட மாட்டாங்க… ஆனா இவங்க இராத்திரி அதான் குடிச்சாங்க…
நாங்க தடுத்தோம்… அதுக்கு அந்தப் பிள்ளை என்ன சொல்லிச்சி…
அன்பா விஷத்தையே
கொடுத்தாலும் நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். குடிசையிலேயேதான் என்ன அடக்கம். என்ன பணிவு. அன்பு என்று எல்லாம் சொற்பொழிவே பண்ணிட்டான்
போங்க…
பெரியவரே… நீங்க
என்னதான் சொல்லுங்க… எதற்கும் ஜாக்கிறதையாக இருங்க நான் வருகிறேன்…
நாட்கள் பல கழிந்தன. போன பாலு இன்னும் திரும்பி வரவில்லை. ரமணிக்கும் மரகதத்திற்கும் காதல் வளர்ந்து தந்தைக்குத்
தெரிந்து எல்லாம் ஆனது.
ரமணி பெரியவரையும்
மரகதத்தையும் விட்டுவிட்டு திருமணத் தேதியைக் குறித்து அனுப்புவதாகச் சென்றான்.
இதுவரை சந்தோஷமாய்
இருந்த மரகதத்தில் முகத்தில் காதலனைப் பிரிந்த துயரம் மேற்கொண்டுவிட்டது. மருமகப் பிள்ளையை, அன்பின் உருவைப் பிரிய மனம் இல்லாது
பெரியவர் கண்ணிலும் நீர் முட்டியது.
(3)
காலை நேரம் ஒரு
பங்களாவின் முற்றத்தில் செல்லம்மாளும் அவள் கணவன்
நாகப்பனும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
என்னங்க… ரமணிக்கோ
வயது ஆகிக் கொண்டே போகுது. அவன் என்னடா என்றால்
படிப்பு பயிற்சி என்று எதை எதையோ சொல்லி காலந் தள்ளிக் கொண்டே போகிறான். அதைப் பார்த்துக் கொண்டு பெத்தவங்களும் சும்மா இருக்கலாமா?
இன்னும் நாலு வருடம் ஆயிடுத்துன்னா பெண்ணை யார் கொடுப்பாங்க…
ஆரம்பிச்சிட்டியா…
உன்னோட பிரசங்கத்தை என்று கடிந்துக் கொண்டார் நாகப்பன்.
நான் என்ன சொற்றேன்னா?
அப்பப்பா… போதும்…
நீ உண்டு உன் மகன் உண்டு. அவன்கிட்டே நீ சம்மதம் வாங்கியா? இப்பவே பெண் பார்க்கப் போகலாம் என்றார் நாகப்பன்.
அவன் எங்க சம்மதிக்க
போறான். நாமா எல்லாத்தையும் முடிச்சிட்டு கட்டுடா
தாலியை என்றால் கட்டப் போறான். அப்படி செய்யலாம்
என்றால் என்று இழுத்தாள் செல்லம்மா…
நீ சொல்வது ஒரு
வகையில் நல்லதாகத்தான்படுது. ஆனால், அவன் வேற
யாரையாவது மனதில் நினைத்துக் கொண்டு இருக்க நாம் இப்படி செய்தா அவன் சந்தோஷத்துக்குத்
தடையாக இருக்கக் கூடாது பாரு என்றார் நாகப்பன்.
அப்பா… என்று
அழைத்துக் கொண்டே வந்தான் ரமணி…
வாப்பா… ரமணி
பயிற்சி எல்லாம் முடிந்துவிட்டதா?
ஏம்பா… பாலு வர்லே…
இங்கே அவனை அனுப்பி இன்னும் வரலேயே என்று தான் வந்தேன்.
ரமணி உனக்கு விஷயம்
தெரியாதா? என்று இழுத்தார் நாகப்பன்.
என்னப்பா… சொல்றீங்க…
பாலுக்கு என்ன… என்று பதட்டப்பட்டான் ரமணி…
பாலுவுக்கு ஒன்றும்
இல்லே… அவங்க அப்பாவுக்குத்தான்…
என்னப்பா… விஷயத்தைச்
சொல்லுங்க…
அவங்க அப்பாவுக்கு
நெஞ்சுவலி… அப்பப்ப வர்றதே… அது இப்ப பலமா ஆரம்பித்து விட்டது. அதற்குச் சிகிச்சை செய்ய அமெரிக்கா போய் இருக்கிறான்.
போய் எத்தனை நாள்
ஆச்சு… ஒரு லட்டர் கூட போடலே… என்று முகத்தை வருத்தத்துடன் வைத்துக் கொண்டு சொன்னான்
ரமணி.
இங்க ஒரு லட்டர்
தான் வந்தது. இந்தா உன் பெயருக்கு வந்திருப்பதாலே
என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை ரமணியிடம் கொடுத்தார் நாகப்பன்.
அன்பு நண்பன்
ரமணிக்குப் பாலுவின் கடிதம்.
நான் என் தந்தையின்
நோய் குறித்து அமெரிக்கா சென்றேன். இப்பொழுது
குணமடைந்து வருகிறார். இன்னும் ஒரு மாதம் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள்
சொல்லுகிறார்கள். நான் அவசரமாக புறப்படும்
படியாக இருந்ததால் உன்னை மீண்டும் சந்திக்க முடியவில்லை.
தங்கை மரகதத்துடன்
ஜாக்கரதையாகவும் பழகு.
இப்படிக்கு
பாலு
ரமணி போய் குளிச்சிட்டு
வா… டிபன் சாப்பிடலாம் என்றாள் அன்புத்தாய்.
ரமணியும் அவன்
தந்தையும் சாப்பிட அவன் தாய் பரிமாறிக் கொண்டு இருந்தாள்.
ஏண்டா… ரமணி உன்
மனசிலே என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய் என்று மெல்ல ஆரம்பித்தாள் செல்லம்மா…
என்னம்மா… சொல்றீங்க…
உன் கல்யாணத்தை
தான்…
பாலு யாரையோ பற்றி
எழுதி இருந்தானே… ஆம்… மரகதம் யாருடா… அவள் என்று கேட்டார் நாகப்பன்.
அப்பா… அது..
என்று சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தான் ரமணி.
அவ ஊரு என்ன…
கோத்திரம் என்ன… சொத்து எல்லாம் இருக்கா… என்று கேட்டாரே அவன் தந்தை.
என்னங்க… இன்னுமா…
உங்களுக்குப் பணத்தாசை போகலே… என்று அழுத்தமாகச் சொன்னவள்… என் அண்ணனை நடுத்தெருவிலே
நிற்க வைத்தீங்களே… அந்தப் பாவத்திற்கே இன்னும் நாம் தண்டனை அனுபவிக்கலே. அதுக்குள்ளே இன்னும் உங்களுக்குப் பணத்தாசை இருந்தால்
இது எங்கு போய் நிற்குமோ என்றாள் செல்லம்மாள்.
ஏண்டி உனக்குப்
பணத்தின் அருமை தெரிந்திருந்தால் தானே…
என்னம்மா… சொற்றீங்க…
எனக்கு ஒரு மாமா… இருக்கின்றாரா?
ஆமாம்பா… என்றாள்
செல்லம்மா.
ரமணி அதெல்லாம்
இப்ப எதற்கு. அவளைப் பற்றி…
அப்ப்பா… நீங்க
எதிர்பாக்கிற மாதிரி அவள் கிட்டே செல்வம் கிடையாது. ஆனால் அன்பான உள்ளம் இருக்கிறது. நல்ல குணம் இருக்கிறது.
ரமணி… உன் புத்தி
இப்படியா போகனும்… என்றார் நாகப்பன்.
அப்பா… நான் எதிர்பார்த்த
மனைவியாக எனக்குத் தெரிந்தவள் அவள் ஒருவளே… எனக்குக் கல்யாணம் என்றால் அவளுடன் தான்…
ஏன்னா? அவளை நான் காதலிக்கிறேன். அவளும் என்னைக் காதலிக்கிறாள். அவளை அந்த அன்பு உள்ளத்தில் கீறல் விழ நான் ஒரு
போதும் சம்மதிக்க மாட்டேன்.
என்னங்க… அந்த
மரகதத்தையே போய் பார்த்திட்டு வாங்க.
சரி… உன் விருப்பம்
அது என்றால் நாங்கள் என்ன செய்வது. நாளைக்கே
போவோம்…
ரமணி இன்னும்
ரெண்டு இட்லி வைச்சுக்கப்பா…
இந்தச் சந்தோஷத்திலே
எல்லாத்தையும் மறந்திட போறீங்க… மதிய சாப்பாட்டைக் கவனமா செய்யும்மா…
பார்த்தாயா… செல்லம்மா
உம் புள்ளே உன்னையே கேலி பண்ணுகிறான்.
அவன் என்ன வேண்டுமானாலும்
சொல்லட்டும். கல்யாணத்திற்குச் சம்மதம் கொடுத்ததே
எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கு தெரியுமா?
ஒரு டன் இருக்குமா அம்மா?
மூன்று பேரும்
சேர்ந்து சிரித்தனர்.
(4)
காலை நேரத்தில்
பனித் துளிகளும், காற்றும் சேர்ந்து உடலை நடுங்க வைக்கும் அந்தக் குளிர் நேரத்தில்
அந்தக் கிராமத்தில் தெருக்கள் கூட்டி சுத்தப்படுத்தி ஒவ்வொரு வீட்டின் முன்னும் கோலம்
போட்டு அழகுப்படுத்தி இருந்த அந்த ஊர் தெருவின் மீது ஒரு அம்பாசிட்டர் கார் ஒன்று சென்று
தங்கப்ப பெரியவர் வீட்டின் முன் நின்றது.
காரிலிருந்து
இறங்கிய நாகப்பனும், செல்லம்மாளும் அந்த வீட்டை அருவெறுப்புடன் பார்த்து இதுவா என்றனர்.
அப்பா… வீடு ஓட்டை
தான்… ஆனால் அவர்கள் உள்ளத்தில் ஓட்டை காணவே முடியாதுப்பா…
நம் வீட்டின்
முன் கார் வந்து நிற்பதைக் கண்டு மரகதம் ஓடி வந்தாள். வந்தவள் ரமணியைப் பார்த்ததும் வெட்கத்துடன் நின்றவள். பக்கத்தில் யாரோ இரண்டு பேர் வந்திருப்பதைப் பார்த்ததும்
அவர்கள் யார் என்று தெரியாமலே… வாங்க… வாங்க…
என்றாள்.
அம்மா… இவள் தான்…
வாங்க… உட்காருங்க…
என்று கிழிந்த பாயை விரித்து அதன் மேலே ஒரு போர்வையைப் போட்டு உட்காரச் சொல்லிவிட்டு
வெளியே ஓடியவள் இருண்டு கப் காபியைக் கொண்டு வந்து கொடுத்தாள்…
அவளுக்குள் ஓர்
ஆனந்தம் நம் கனவுகள் நிஜமாகப் போகிறது. இவர்
என்னை ஏமாற்றவில்லை. சொன்னபடியே அழைத்து வந்துட்டாரே
என்று மனதுக்குள் பெருமிதம் கொண்டாள்…
ஏம்மா… உன் பேரு…
என்ன? என்றாள் செல்லம்மா.
மரகதம் என்றாள்
வெட்கத்துடன். உங்க அப்பா… எங்க…
இப்ப வந்திடுவாருங்க…
கழனிக்குப் போய் இருக்கிறாருங்க.. நீங்க இப்ப
என்ன சாப்பிடுவீங்க என்று கேட்க, தான் என்ன பேசுவது என்று தெரியாமல் உலறிக் கொட்டினாள்.
மரகதத்தை அழைத்துக்
கொண்டு ரமணி பின்புறம் சென்று தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வர செலவுக்குப் பணத்தைக்
கொடுத்து அனுப்பினான்.
அம்மா… பொண்ணு
நான் சொன்னது போல… என்றான் ரமணி.
என்னங்க… இவளை
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்ன அடக்கம்
ஒடுக்கமா பணிவா பேசுவது என்றாள் செல்லம்மாள்.
எனக்கும் பிடித்துதான்
இருக்கிறது. ஆனால் என்று இழுத்தார் நாகப்பன்.
பணம் ஒன்று தான்
இல்லை என்கிறீர்கள். அது இன்றைக்கு வரும் நாளைக்குப்
போகும்.
அடடே… ரமணி எப்பப்பா
வந்தாய்… போனது காயா? பழமா? என்று சொல்லிக் கொண்டே வந்தவர் பக்கத்தில் இருந்த செல்லம்மாவையும்
நாகப்பனையும் பார்த்து பிரமித்து நின்றார் பெரியவர்.
ரமணி இது…
இது தான்பா… அவளோட
அப்பா…
ரமணி இந்தக் கல்யாணத்திற்கு
நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்.
என்னப்பா சொல்றீங்க…
தங்கப்பன் பெண்ணை
நான் மருமகளாய் ஏற்றுக்க மாட்டேன். இது ஒரு காலும் நடக்காது…
என்னப்பா சொல்றீங்க…
இவரை உங்களுக்குத் தெரியுமா?
அண்ணா… எப்படி
இருக்கிறீர்கள்… என்றாள் செல்லம்மாள் அழுதுக் கொண்டே.
உம்… இவன் வீட்டிலே
இருக்க நமக்குத் தகுதி இல்லை… வா போகலாம்…
என்னடா… சொன்னாய்
என் சொத்திலே ஏக போகமாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் உனக்கு உன் வீட்டிற்குத் துரோகம்
செய்த உனக்கு அநாதையா இருந்தவனை எங்க வீட்டு மருமகனாக்கிக் கொண்ட எனக்கு இன்னும் வேணும்டா…
வாடி… இவன் கிட்டே
நமக்கு என்ன பேச்சு… என்றார் நகாப்பன்.
அண்ணா…
தங்கச்சி… நீயாவது
சுகமாய் இருப்பாய் என்று நினைத்து தான் எல்லாம் விட்டுவிட்டு வந்துட்டேன். ஆனால் என் துரதிஷ்டம் என் மகளுக்கும் அது தொத்திக்கிட்டது
பார்த்தாயா?
மாமா… அப்படி
எல்லாம் சொல்லாதீங்க. என் மனைவி மரகதம். இது தேவலோகத்திலே உறுதியானது…
வாடா… இவன் கிட்டே
நமக்கு இருக்கத் தகுதியே இல்லை… என்றார் நாகப்பன்.
அப்பா… கொஞ்சம்
நில்லுங்க… நீங்க வேண்டுமானால் போங்க…
என்னடா… சொன்னாய்
என்று தன்னை மறந்து ரமணியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அரைந்தார்… நாகப்பன்.
நாகப்பா… வளர்ந்த
பிள்ளையை அடிக்க உனக்கு மனசு எப்படிடா வந்தது என்றார் தங்கப்பன்.
என் பிள்ளை நான்
அடிப்பேன்… நீ யாரு அதைக் கேட்க…
நான்… யாரா… முப்பது
வருஷத்துக்கு முன்னே நீ என்கிட்டே வந்தாயே அப்ப என்ன நடந்தது. அப்புறம் நீ என்ன எல்லாம்
செய்தாய். நான் ஏன் உன்னை விட்டுப் பிரிந்தேன் என்று கொஞ்சம் உன் முதுகைத் திரும்பிப்
பார்த்தாயா?
டேய்… இப்ப என்கூட
வர்ரயா? இல்லையா?... என்றார் நாகப்பன்.
வர முடியாது…
வரமாட்டாயா? அப்படி என்றால் நாளை காலையில் சாவு தந்தி வரும். நான் போறேன்.
நீ இங்கே இரு என்று கடகட என்று பொறிந்துத் தள்ளிவிட்டு மனைவியை இழுத்துக் கொண்டு
நகர்ந்தார்.
அப்பா… என்னை
மன்னித்திடுங்க.. நான் வர்றேன். நீங்க சாகக்
கூடாது என்று சொன்னதும் ஆனந்தம் அடைந்தார் நாகப்பன். அதே சமயம்,
இதையெல்லாம் கேட்டுக்
கொண்டு இருந்த மரகதம் ஓ… வென்று கதறி அழுதாள்…
என்னவெல்லாம் மனக்கோட்டை கட்டினேன். எல்லாம்
மணல் கோட்டையாகிவிட்டதே என்று நினைத்து விக்கி விக்கி அழுதாள். அந்தச் சமயம் ரமணி மரகதத்திடம் சென்றான்.
என்னங்க… என்னை
விட்டுப் போறிங்களா?…
மரகதம் உன்னைவிட்டுப்
போகலே… நம் காரியம் ஜெயிக்கனும் என்றால் கொஞ்சம் விட்டுப் பிடித்துத்தான் ஆகணும். நீ என் மனைவி இது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது. இதை யாராலும் மாற்ற முடியாது. நான் வருகிற வரைக்கும் எனக்காகக் காத்திரப்பாயா? சொல்லு மரகதம் என்றான் ரமணி.
என்னை உங்களுக்கு
இந்த இதயத்தில் இடம் கொடுத்த பிறகு அதை நான் நான் ரோஜா மலராகக் காப்பேன். இது உறுதிங்க… என்றாள் மரகதம்.
அண்ணா… வெகுநாட்களுக்குப்
பிறகு உங்களைச் சந்தித்தும் பேசக்கூட உரிமையில்லாத துரோகி ஆகிவிட்டேனே…
தங்கச்சி… நீ
சுகமாய் இருந்தால் அது போதும்மா…
உங்களைவிட்டால்
பேச்சை வளர்த்துக் கொண்டே போவீங்க… என்று இரண்டு பேரையும் காரில் இழுத்துத் தள்ளி அந்த
ஊரைவிட்டுக் கிளம்பினார் நாகப்பன்.
துன்பம் என்றால்
என்ன என்று தெரியாத ரமணிக்கும் இப்ப ஏற்பட்ட துன்பத்தால் அழுகையே காணாத அவன் பால் முகத்தில்
கண்ணீர் வடிவதைக் கண்டு தாய் புலம்பினாள்.
தான் இப்பொழுது
அழுவதில் பயன் இல்லை என்று அறிந்து, இனி நாம் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு
அழுகையை நிறுத்தி எப்படி அப்பாவின் மனதை மாற்றுவது என்று நினைத்து நினைத்து ஒரே சிந்தனை
மயமாக விளங்கினான். ஒரு வருடம் கடந்தது ரமணிக்குப்
பைத்தியம் பிடித்தவன் போல நடந்துக் கொண்டான்.
இதைக் கண்ட பெற்றோர்கள்
இதற்கு என்ன செய்வது என்று தெரிந்தும் அதை நிறைவேற்ற முடியாமல் வைராக்கியத்தில் மகனின்
இன்பத்தைச் சோகமாக்கினர். டாக்டர்களிடம் பலரிடம்
காண்பித்தும் அதற்கு வைத்தியம் இல்லை. மனதில்
அவருக்கு ஏதோ சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. அதை
நிறைவேற்ற வழி செய்யுங்கள் என்று செல்லுகிறார்களே தவிர குணப்படுத்திவிடலாம் என்று ஒரு
டாக்டராவது சொல்லமாட்டேன் என்கிறார்களே…
மனைவியின் தொல்லை
ஒரு பக்கம் அண்ணனுக்குச் செய்த துரோகத்திற்கு இதை வைத்து தண்டனை வாங்கிக் கொண்டால்
தான் எனக்குச் சந்தோஷமாய் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள். இருதலைக் கொல்லி எறும்பாகத் தவித்தார் நாகப்பன்.
(5)
காலை மணி பத்து
இருக்கும் முனுசீப் கையில் ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு பெரியவர் வீட்டிற்குள் நுழைந்தார்.
அடடே… முனுசீப்…
எங்க காலையிலே பேப்பரும் கையுமா… என்றார் பெரியவர்.
எல்லாம் விஷயமாகத்தான்
இந்த பேப்பரைப் படியுங்க…. அந்தப் பையனை நம்பினீங்க… இப்ப என்ன ஆனான் பார்த்தீங்களா?
யாரு என்ன சொல்றீங்க
என்று பேசிக் கொண்டே அந்த பேப்பரைப் பார்த்தவர் அப்படியே நின்று விட்டார். அப்படி என்ன இருந்தது அந்தப் பேப்பரில்…
தங்கப்பன் இன்டஸ்டிரியல்
மில்லின் ஓனர் நாகப்பனின் மகன் டாக்டர் ரமணி லாரியில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரைப் பக்கத்தில் உள்ள தங்கப்பன் நர்சிங் ஹோமில்
சேர்த்தார்கள். ஆனால் இரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டதால்
உயிர் பிழைப்பது கடினம். அவருக்குத் தேவையான
இரத்தம் இரத்தக் கிடக்கில் கிடையாது. இரத்ததானம்
செய்ய விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு வரவும். அவர்களுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
ஐயோ… அத்தான்…
உங்களுக்கா… இந்த நிலை… நான் என்ன பாவம் செய்தேன்… அப்பா… உடனே புறப்படுங்கள் அவரைப்
பார்க்காமல் என்னாலே இருக்க முடியாது…
டாக்டர்… ரமணி
எப்படி இருக்கிறான் என்றார் பெரியவர்.
டாக்டர்… என்
அத்தான் எப்படி இருக்கார்…
சார் நீங்க… இந்த…
என்று இழுத்தார் டாக்டர்…
டாக்டர்… அதற்கெல்லாம்
இப்ப எதற்கு ரமணி…
சார் அவன் இரத்தம்
இதுவரை கிடைக்கவில்லை. இன்னும் ஒரு மணி நேரம்
தான் அவன் உயிருக்கு நாங்க கேரண்டி…
அப்படி என்றால்
என் அத்தானை நாங்க பார்க்க முடியாதா? டாக்டர் என் இரத்தத்தை சோதித்துப் பாருங்களேன்.
கொஞ்சம் வாம்மா…
இப்படி என்று ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்…
தியேட்டரைவிட்டு
வெளியே வந்த டாக்டரின் முகத்தில் சந்தோஷம் கண்ட தங்கப்பன். டாக்டர்…
சார்… அவங்களோடு
இரத்தம் சரியா இருக்கு…
அப்படியா… உடனே
செய்யுங்க… டாக்டர் நான் என்பதை நாகப்பனிடம் சொல்லாதே… என்று எச்சரித்து இருந்தார்.
சார்… உங்க மகன்
பிழைத்துக் கொள்ளப் போகிறான்.
என்ன டாக்டர்
சொல்றீங்க… என்று ஆனந்தம் மேலிட கேட்டார் நாகப்பன்.
ஆமாம். ஒரு பெண்ணின் இரத்தம் ஒத்து இருக்கிறது. இப்பதான் கிடைத்தது. கொஞ்சம் வெளியே போறீங்களா?
டாக்டர் அந்தப்
புண்ணியவதி யாருங்க என்றாள் செல்லம்மா.
அதெல்லாம் உங்களுக்கு
இப்பச் சொல்ல நேரம் இல்லை. கொஞ்சம் வெளியே
போறீங்களா? நர்ஸ் அந்தப் பெண்ணை அழைத்து வா…
என்றதும் பெற்றோர்கள் வெளியேறிவிட்டனர்.
மரகதத்தின் ஒவ்வொரு
துளி இரத்தமும் ரமணியின் உடம்பில் அங்கம் அங்கமாக பாய்ந்துச் சென்று வெயில் இல்லாமல்
வாடிய செடியும், மழையில்லாமல் வதங்கிய செடியும் வெயிலையும் நீரையும் கண்டதும் துளிர்வது
போல ரமணியின் உயிர் மரகதத்தின் இரத்த தானத்தில் செழித்துக் கொண்டு இருந்தது.
மரகதம் நல்ல உணவையும்,
தானம் செய்ததற்கும் நாகப்பன் சொச்சம் கொஞ்சம் கொடுத்திருந்தார். அதை மரதகதம், டாக்டர் நாங்க யார் என்று தெரிந்துமா?
டாக்டர்… என்று
சொல்லிக் கொண்டு நாகப்பன் வந்தார். வந்தவர்
மரகதத்தைக் கண்டதும் அப்படியே வாய்டைத்து நின்றுவிட்டார்.
டாக்டர்… இவள்..
இவங்க இரத்தம்
தான் ரமணிக்கு…
டாக்டர்… என்ன
காரியம் செய்தீங்க…
மரகதம்… மரகதம்…
என்று புலம்பினான் ரமணி.
என்னங்க… ரமணி பேசராங்க என்று அழுதுக் கொண்டே சொன்னாள் செல்லம்மா.
அப்பா… என் மரகதம்
எங்கே?
இதோ இருக்கேன்ங்க…
என்றாள் மரகதம்.
மரகதம்… நான்
இப்ப எங்க இருக்கிறேன்… என்றான் சுற்றும் முற்றும் பார்த்து…
டாக்டர் நடந்ததை
எல்லாம் சொன்னார்.
அப்பா… இதுவரை
உள்ளத்தில் ஒன்றி இருந்த நாங்கள் இப்ப இரத்தத்திலும் ஒன்றிவிட்டோம். என்னை பெற்றெடுத்த உங்களுக்கே என் உடம்பில் ஓடும்
இரத்தம் இல்லை.
நீங்க என்னை பெற்றெடுத்தீங்க…
வளர்த்தீங்க… அவன் இறந்தான். ஆனால் அவனுக்குப்
புத்துயிர் கொடுத்தாள் இந்தப் பாவி மகள். இப்ப
நான் யாருக்குச் சொந்தம் சொல்லுங்கப்பா…
ஐயோ… கடவுளே…
நான் என்ன செய்வேன்… தங்கப்பா.. என்னை மன்னிப்பாயா என்று கெஞ்சினான் நாகப்பன்.
இந்த வார்த்தையைக்
கேட்ட அனைவரும் அடைந்த மகிழ்ச்சியை அளவிட்டுச் சொல்ல முடியுமா?
நாகப்பா, பணத்தாசையில் நான் உன்னை எவ்வளவோ கொடுமை படுத்தினேன். அதையெல்லாம் மறந்து மீண்டும் எனக்கு வாழ்வு தந்த
உன் உள்ளத்தில் நான் எப்படி மறுபடியும் இடம்பெறுவேன்.
ஒருவனை வஞ்சனை
செய்தால், அவன் கண்டிப்பா வஞ்சிக்கப்படுவான் என்பதை உணர்ந்துக் கொண்டேன். என்னை மன்னித்து ஆதரவு தருவா…
இந்த வார்த்தையைக்
கேட்டதும் தங்கப்பனின் கண்களில் வழிந்த நீருக்கு அளவு ஏது? உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு என்ன சொல்வது.
சார்… இவருக்கு
இன்னொரு முக்கியமான செய்தி… கிடைத்திருக்கு என்றார் டாக்டர்…
என்ன டாக்டர்
சொல்றீங்க… என்றான் ரமணி. மரகதத்தைப் பிடித்துத்
தாங்கி அவள் உடம்பின் மீது சாய்ந்துக் கொண்டு…
ஆமாம்… ரமணி.
நீ உலக எழுத்தாளர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறாய்.
என்ன டாக்டர்
சொல்றீங்க. ரமணி எழுத்தாளனா? என்று வியப்பு
மேலிட கேட்டாள் செல்லம்மா.
எனக்குக் கூட
தெரியாதுங்க…நேற்று தான் செய்தி கிடைத்தது.
ராணி புத்தகத்தில் வாழ்க தமிழ் என்று ஒருவர் கதை எழுதினாரே. அது யாரும் இல்லே. நம்ம ரமணி தான். இவர் எழுதிய
உள்ளங்கள் கதையை படமெடுத்தாங்க இல்லியா…
அது தான் நான்கு
வருடம் ஓடியதே… என்றாள் செல்லம்மா.
ஆமாம்… அதை ஆங்கிலத்தில்
எடுத்தவர்கள் அமெரிக்காவில் ஐந்து வருடம் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றார் டாக்டர்.
அப்படியா?… ரமணி
இதுவரை எங்க கிட்ட சொல்லவே இல்லீயே…
இதற்குப் பலகோடி
ரூபாய் இவருக்குக் கொடுத்தாங்களாம். ஆனால்
இவர் வாங்கிக்க மறுத்திட்டாராம். இப்ப புதிதா
வள்ளுவர் கலைக்கல்லூரி ஒன்று இருக்கே அது இவர் பணத்தின் உதவியாலே நடைபெறுகிறதாம்.
இதுவரை எங்கிட்டவே
மறைத்து வைக்க காரணம் என்ன? சொல்லு ரமணி என்றார் தந்தை.
அப்பா… பணத்தாசையில்
என் லட்சியம் கெடக்கூடாது என்று தான்…
மகனே… இப்படிப்பட்ட
ஒரு பிள்ளை பெத்ததுக்காக நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாலும் எனக்குத் தகுதி இல்லேப்பா…
இதோ இருக்கிறாரே… இவரும், மரகதம் தான் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
நாகப்பா… நீ மனம்
மாறுவே என்று நான் கனவிலும் நினைக்கலே…
ஒரு நாள் ரமணிக்கும்
மரகதத்திற்கும் நிச்சயித்த தேதியில் சிறப்பாக பலர் முன்னிலையில் குறிப்பாக இளம் வயதில்
இந்தியக் குடிமகன் தமிழன் ஒருவன் உலக எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆனால் தமிழ் நாட்டிற்கும்
அதையொட்டி இந்தியாவிற்கே பெருமை தேடித் தந்த மனித குல தெய்வமாகத் திகழும் ரமணியை வாழ்த்த
வெளிநாட்டு மேதைகளும், அரசியல் வாதிகளும், பிரதமர்களும் கூடி அவர்களின் திருமணத்தை
நடத்தி அவர்களின் வாழ்வில் இன்ப விளக்கை ஏற்றினார்கள்.
தனிப்பட்ட ஒரு
மனிதன் புகழுக்காக அலையாமல், பணத்துக்காக ஆசை கொள்ளாமல் தன் இலட்சியமே குறிக்கோளாகக்
கொண்டு வாழ்ந்த ரமணியைப் பாராட்டி பல கடிதங்களும், தந்திகளும் குவிந்த வண்ணம் இருந்தன.
செல்வச் செழிப்பிலும்
கலை ஆர்வத்திலும் சிறந்து விளங்கிய நாடு ஆங்கிலேயனால் பாதிக்கப்பட்டு குன்றி வந்த சமயத்தில்
இப்படிப்பட்ட பேரும் புகழும் இந்தியாவுக்குக் கிடைத்ததே என்று எண்ணிப் பெருமை கொள்ள
வேண்டியவர்கள் பலர் இருக்க, இதெல்லாம் வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு தன் இலட்சியப்
பாதையில் சென்றான் ரமணி.
Comments
Post a Comment